Sri Vu Ve Perukaranai Swami

Sri Bashyamum Sri Bashyakaararum
Sri Vu Ve Perukaranai Swami
Sri Vu Ve Perukaranai Swami attains Aacharyan Thiruvadi
Age does not stand in his way :
87th Thirunakshathram
Swami's 86th Thirunakshathram
Swami's 85th Thirunakshathram
Welcome to know about Sri Perukaranai Swami
Swami's profile in brief
Awards
Perukaranai's Swami's Sathabhishekam
Books authored by Perukaranai Swami
Stotra Ratnam
Upanyasa Manjari
Ahobila Kshethram
Pushpanjali
Ekadasi Mahimai
Dharmam Thalai Kaakkum
Mouna Vridham
Ilaya Perumaalum Ilaya Azhvaanum
Hanumanaip Ponra Aacharyan
Thula Kaveri Maahaathmyam
Mummatha Saaram
Nadappadhu Nadandhe Theerum
Patraa Kurai
Pandidhan Yaar ?
Twentyfour Steps
Saadhu Dharisanam
Josyam Balithuvittadhe
Vedham Odhudhal
Pirattiyin Avadhaara Visesham
Anger turns to Anugraham !
Paravaigal
Ten, Three and One
Kadan - Loan
Be Proud, but how ?
Sathurangam
Maarvam Enbadhu Oru Koil
Paasam
Ramanuja Padam
Viswamithrar
Idukkan Kalaiyum Iraivan
Ramanujar Kaattiya Visishtadvaidham
Sri Bashyamum Sri Bashyakaararum
Bagavath Baktharhalin Perumai
Kannika Dhaanam
Kakkum Iyalbinan
What is Truth?
Sampathum Vibathum
Saayujjam
Moonru Manidhargal
Amudhamum Vizhamum
Oru Thaniganin Kelvi
Yathra Praadhaa Sahodharaha
Vuyiraa? Maanamaa?
Moonru Kutrangal
Sammarjanam
Manam En Mariyadhu ?
Sraardham Seyvadhu En ?
Pithru Kaariyathil Oru Visesham
Makkalin Pokku
Dharma Sookshmam
Pava Naasini
Thirumagal Vasikkum Idam
Pirandha Idathaye Adaiyum
Aacharya Kaalamegam
Bagavath Geethaiyum Thiruppavaiyum
Kodari
Ore Iravu Ore Pahal
Padithavan Panakkaaranaa ?
Iru Sahodharargal
Bakthanin Perumai
Vunmaiyai Yosithu Paar
Manidhanin Vayadhu
Naangal Naangale Neengal Neengale
Prapathiyil Oru Visesham
Dhaasyam
Vaishnavan Yaar ?
Deha Sampathu
Favorite Links
Contact Me

Enter subhead content here

ஸ்ரீபாஷ்யமும் ஸ்ரீபாஷ்யகாரரும்

இருள்தருமா ஞாலத்துள் இருக்கும் மக்கள் அனைவரும் உய்ய எண்ணிப் பகவான் வேதமாகிற விளக்கைக் கொடுத்தருளினான். பகலில் ஏற்படும் சூரியனின் வெளிச்சம், வெளியிலுள்ள பொருள்களைக் காட்டி வெளியிருட்டை நீக்குமேயன்றி அக இருளை நீக்க வல்லதன்று: வேதம் என்ற விளக்கு, எல்லா இருளையும் நீக்கும். இதன் உதவிக் கொண்டுதான் ஆத்ம ஸ்வரூபத்தையும் பகவத்ஸ்வரூபத்தையும் அசேதனப் பொருளையும் அறிந்து நற்கதி பெறுகிறோம்.

வேதம் என்ற விளக்கைப் பகவான் நமக்கு அருளினால் அளித்தபோதிலும், அதன் உண்மைப் பொருளைப் அறிந்து நற்கதி பெறுகிறவர் சிலரே. சிலர் அதன் உண்மைப் பொருளை அறியாமலும், வேறுவிதமான அர்த்தங்களைக் கூறியும், விளக்குப் பூச்சிகளைப் போல் அதிலேயே விழுந்து மாண்டுவிடுகின்றனர்.

வேதம் மூன்று பாகங்களாக அமைந்துள்ளது - கர்ம காண்டம், தேவதா காண்டம், ப்ரஹ்ம காண்டம் என்று. முதல் காண்டமான கர்ம காண்டத்தின் பொருளை எடுத்துக் கூறுவதற்காக ஜைமினி என்ற மகரிஷி ஸூத்ரம் இயற்றினார். தேவதா காண்டம் என்ற இரண்டாவது காண்டத்தை விளக்குவதற்குக் காசக்ருத்ஸ்னர் என்ற மகரிஷி ஸூத்ரம் செய்தார். மூன்றாவதான ப்ரஹ்ம காண்டம் என்ற உபநிஷத்துக்களின் பொருளைக் கூறுவதற்கு வேதவியாஸர் என்ற மகரிஷி ஸூத்ரம் வகுத்தார்.

த்ரயீ என்று சொல்லப்பெறும் வேதத்திற்கு மங்கள ஸூத்ரம் போன்ற ஸூத்ரத்தை அம்ருதம் என்று பெரியோர் சொல்வர். 'பாராசர்யவசஸ்ஸுதாம்' என்றார் ஸ்ரீபாஷ்யகாரர். உலகத்தில் பாணினி ஸூத்ரம், வாத்ஸ்யாயன ஸூத்ரம், கெளதம ஸூத்ரம், ஜைமினி ஸூத்ரம் என்றாற் போல் மகரிஷிகள் செய்த ஸூத்ரங்கள் பல உள்ளன. ஆயினும், ஸூத்ரம் என்றால் ப்ரஹ்மஸூத்ரமே பெரும்பாலும் பெரியோர்களால் குறிக்கப்பெறுகிறது. இந்த ஸூத்ரங்களுக்குப் பாஷ்யங்களைப் பலர் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு, பாஷ்யகாரர் என்று பெயர். ஆனாலும், ப்ரஹ்ம ஸூத்ரத்திற்குப் பாஷ்யம் இட்டவர்களைத்தான் அடைமொழி இல்லாமல் பாஷ்யகாரர் என்று அழைப்பது வழக்கம். மற்றப் பாஷ்யகாரர்களை மகா பாஷ்யகாரர் என்றும், ந்யாய ஸூத்ர பாஷ்யகாரர் என்றும் அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள்.

மேலும், மற்றப் பாஷ்யங்களுக்கு, பாஷ்யம் என்றுதான் பெயர். நம் ஸ்ரீராமாநுஜர் இயற்றிய பாஷ்யத்திற்கு 'ஸ்ரீபாஷ்யம்' என்று பெயர். ஆகையாலேயே இவருக்கு 'ஸ்ரீபாஷ்யகாரர்' என்று பெயர். வெறுமனே பாஷ்யகாரர் என்று சொல்லுவதில்லை. ஆகவே ஸ்ரீபாஷ்யம் என்றும், ஸ்ரீபாஷ்யகாரர் என்றும் நம்முடைய பாஷ்யத்தையும், நம் ராமாநுஜரையும் கெளரவத்துடன் சொல்லிப் போற்றுவது வழக்கம். ப்ரஹ்மஸூத்ரம் என்றும், ப்ரஹ்மஸூத்ர பாஷ்யம் என்றும் ஒவ்வொர் அடைமொழியைச் சேர்த்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஸஹஸ்ரநாமம் என்றாலே விஷ்ணு ஸஹஸ்ரநாத்தைத்தான் குறிக்கும். பாகவதம் என்றாலே ஸ்ரீகிருஷ்ணனுடைய கதைகளைச் சொல்லும் ஸ்ரீமத் பாகவதத்தைத்தான் குறிக்கும். அது போலவே இங்கும் அறியத்தக்கது.

விசாலமான மனத்தையுடைய நம் ராமாநுஜர் ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு ஆழ்ந்த கருத்துக்களுடன், வேதங்களுடைய அர்த்தத்தைத் திருவுள்ளத்தில் பற்றி, அழகாக ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை இயற்றினார். இந்த ஸ்ரீபாஷ்யத்தை மக்கள் அனைவரும் போற்றுகின்றனர். ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் உள்ளவர்கள் இதை மிக்க ஆதரவுடன் போற்றுகின்றனர் என்பது மாத்திரம் அல்ல; மதாந்தரத்திலுள்ளவர்களும் இதை ஆதரவுடன் புகழ்கின்றனர். இதில் உண்மையில் ஒருவிதக் குற்றமும் இல்லாமலிருந்தபோதிலும், ஏதாவது ஆபாஸமான குற்றத்தை எடுத்துக் கூறி, இதை நாம் கண்டித்துவிட்டோம் என்று உலகத்தாருக்கு அறிவிக்க, இந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய ஸ்ரீஸூக்தியான ஸ்ரீபாஷ்யக்ரந்தத்தை அநுவதிப்பதற்கு எடுத்துச் சொல்லும்போது, 'ஸ்ரீமத்பாஷ்யத்தில், ஸ்ரீபாஷ்யத்தில்' என்றே கூறுவார்கள். அவர்களுக்கும் இது மதிப்பிற்கு உரியதாகவே விளங்குகிறது.

ஒருவன் தன் தாயினிடம் ஏதோ காரணத்தால் வெறுப்புக் கொண்டான். அது முற்றியது. ஒரு சமயம் தாயை அடிக்க எண்ணினான். கையில் தடியையும் எடுத்து ஓங்கிவிட்டான். அப்பொழுது கையில் சுளுக்கு ஏற்பட்டு வலிக்க ஆரம்பித்தது. அவன் அந்த வலி தாங்க முடியாமல் தாயை அடிக்குக் கையை ஓங்கியபோதிலும் 'அம்மே!' என்று கதறுகிறான். அவன் வாயில் வருவது போல், ஸ்ரீபாஷ்யத்தைத் தூஷிக்க நினைக்கிறவர்களும் கெளரவத்துடன் இதை ஸ்ரீபாஷ்யம் என்றே சொல்லுவார்கள்.

வேதங்களால் போற்றப்பெறும் பகவானைத் தூஷிக்க நினைத்த துரியோதனன், கண்ணன் தூது வந்த சமயத்தில், 'அவசா: ப்ரதிபேதிரே' என்ற ரீதியில் தன்னையும் அறியாமல் எழுந்து வணங்கினான். அதுபோலவே, பகவானையும் அவனுடைய கல்யாண குணங்களையும் எடுத்துக்கூற வந்த பாஷ்யத்தைத் தூஷிக்க வந்தவர்களும் ஸ்ரீபாஷ்யம் என்றுதான் தமது க்ரந்தங்களில் எழுதுவார்கள். வைய வந்த வாயும் சூர்ப்பணகை போல் வாழ்த்துமித்தனை. இப்படிப் பட்ட கெளரவத்தைப் பெற்றது ஸ்ரீபாஷ்யம்

தேசாந்தரங்களில் உள்ளவர்களும் ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள ஸ்ரீபாஷ்யத்தை மொழிபெயர்த்துப் படித்துப் பார்த்தார்களாம். இப்படியே சங்கரபாஷ்யம், த்வைதபாஷ்யம் முதலியவற்றையும் படித்தார்கள். பிறகு, நம் ராமாநுஜர் செய்த பாஷ்யமே உலக விவகாரத்தை ஓட்டினார்போல் இருக்கிறபடியால் உயர்ந்தது என்று புகழ்ந்தார்களாம். 

ஸ்ரீபாஷ்யம், உபநிஷத்துக்களின் அர்த்தத்துக்கு ஒருவித விரோதமில்லாமலும், பகவானுடைய திருவுள்ளத்திற்கு உகந்தும் இயற்றப் பெற்றிருப்பதனால், முதல் ச்லோகம் ஆரம்பித்துக் கடைசி வரையில் ஒரு தடவை பாராயணம் செய்தாலே மிக்க பரிசுத்தியை அளிக்கும். நாம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுவோம். ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை முதலிய புனிதக் கிரந்தங்களைப் பாராயணம் செய்வதனால் எந்தப் பலனை அடைவோமோ அந்தப் பயனை இதைப் பாராயணம் செய்தால் பெறலாம். மகாபாவிகளுக்கும் இதன் பாராயணம் பிராயச் சித்தமாகிறது. கங்கை முதலிய புண்ணிய நதிகளில் விசேஷ நாட்களில் ஸங்கல்பம் செய்துகொண்டு ஸ்நானம், தானம் செய்தால் உண்டாகும் பலனை இது எளிதில் கொடுத்துவிடுகிறது.

ஸ்ரீகிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்துக்கொண்டு கடைசியில் தன் இடத்தை அடைந்தான். அப்போது தன் ஒளியைத் தன்ைப் பிரதிபாதிக்கும் பாகவதத்தில் வைத்துவிட்டானாம். 'ஸ்வகீயம் யத் பவேத் தேஜஸ் தச்ச பாகவதே ந்யதாத்' என்பது பிரமாணம். ஸ்ரீராமன் தன் ஒளியை ஸ்ரீமத் ராமாயணத்தில் வைத்துவிட்டானாம். ஆகையாலேயே குசலவர்கள் ராமாயணத்தைப் பாடியபோது, ஒருவருக்கும் தெரியாமல் சிம்மாசனத்தை விட்டுக் கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்துவிட்டான். இதற்கு என்ன கருத்து என்று ஆராய்ந்தால், 'நான் அவதாரத்தை முடித்துக் கொண்டுவிட்டேன்; என்னைப் பூஜித்து அடையும் பலனை, என்னைச் சொல்லக்கூடிய ஸ்ரீமத் ராமாயணத்தைப் பூஜித்து அடைவீர்களாக. என் சிங்காசனத்தில் அதை வைத்துப் பாராட்டுங்கள்; என் எல்லாப் பிரபாவத்தையும் அதில் வைத்துவிட்டேன்' என்று. இதைத்தான், 'ஸ சாபி ராம: பரிஷத்கத: சநை:' என்றது ராமாயண ஸ்லோகம்.

இதனால் ஸ்ரீமத் பாகவதம் பகவானான ஸ்ரீகிருஷ்ணனின் திவ்யமங்கள விக்ரஹரூபம்; ஸ்ரீமத் ராமாயணம் ராமனுடைய திவ்ய மங்கள விக்ரஹரூபம் என்று ஏற்படுகிறது. இதுபோலவே ராமாநுஜருடைய ஸ்ரீஸூக்தியான ஸ்ரீபாஷ்யமும் பகவானான பரப்ரஹ்மத்தின் திவ்யமங்கள விக்ரஹரூபம் என்று ஆன்றோர் கூறுவர்: இதனால் இதைத் திருத்தவே மாட்டார்கள். உண்மையில் ஒருவித அசுத்தியும் அதில் இல்லை.

பஞ்சபாண்டவர்கள் த்ரெளபதியுடன் அஜ்ஞாதவாஸத்தைக் கழிப்பதற்காக விராட நகரத்தில் ஒரு வருஷம் வசித்தார்கள். அப்போது விராடராஜனின் புதல்வியான உத்தரையின் கூந்தலை அழகுபடுத்த த்ரெளபதி ஸைரந்த்ரிகை வேஷம் பூண்டாள். இவள் என்ன செய்வது வழக்கமென்றால், கூந்தலை வாருவது, வாசனைத் திரவியங்களைத் தடவுவது, பின்னல் பின்னுவது, புஷ்பங்களைச் சூட்டுவது போன்றன. இப்படிச் செய்பவர்களை ஸைரந்த்ரிகை என்பர். இந்த ஸைரந்த்ரிகை ஸ்தானத்தில் ஸ்ரீபாஷ்யகாரரின் ஸ்ரீஸூக்தி அமைந்துள்ளதாம். இது, வேதவாக்கு என்ற பெண்ணின் கூந்தலைக் கட்டி அழகுபடுத்துகிறது. இதைத்தான், 'சிரந்தநஸரஸ்வதீ-சிகுரபந்த-ஸைரந்த்ரிகா:' என்றார் வேதாந்தசாசிரியர் (யதிராஜஸப்ததி-36). இத்தகைய பெரும் பெருமை வாய்ந்த ஸ்ரீபாஷ்யத்தை முப்பது தடவை காலக்ஷேபம் பிறருக்கு ஸாதித்தார் இந்த ஆசிரியர். இருபத்தெட்டாவது தடவை காலக்ஷேபம் ஸாதித்தபோது தத்வடீகை என்ற உரையை இதற்கு வகுத்தார். இந்த ஸ்ரீபாஷ்ய ஸ்ரீஸூக்தியில் ஆழ்ந்த பொருள்கள் உள்ளடங்கியிருக்கிறபடியால் எத்தனை தடவை வாசித்தாலும் பண்டிதர்களுக்குத் திருப்தியே உண்டாவதில்லை. ஒவ்வொரு தடவையும் ஸ்ரீஸூக்தியை ஸேவிக்கும்போது புதிய புதிய அர்த்தங்கள் தோன்றும். பரிசயம் செய்யச் செய்யதான் இதன் காடிந்யம் புலப்படும். அதிக பரிசயம் செய்யாதவர்களுக்கு, மேலெழுந்தாற்போல் ஓர் அர்த்தம் தோன்றுமாகையால், 'மிகவும் எளியது இந்த க்ரந்தம்' என்று எண்ணுவார்கள். அதிகமாகப் பரிசயம் செய்பவர்களுக்குத்தான் இதிலுள்ள விசேஷங்கள் புலப்படுமாகையால், இதன் காம்பீர்யம் ரஸிக்கத் தக்கதாக இருக்கும். 'பரிசிதகஹநாந் ந: ப்ரஸ்நுவீத ப்ரஸாதம்' என்றார் வேதாந்தாசிரியர். இந்தக் காரணத்தினால்தான் தமது ஆயுட்காலம் முழுவதையும் ஸ்ரீபாஷ்யகாரருடைய ஸ்ரீஸூக்திகளிலேயே பொழுதுபோக்கினார். 'யதிப்ரவர பாரதீ ரஸபரேண நீதம் வய:' என்றும், 'நிர்விஷ்டம் யதிஸார்வபெளமவசஸாம் ஆவ்ருத்திபிர் யெளவநம்' என்றும் கூறியருளினார்.

அதிகரணஸாராவளி என்ற க்ரந்தத்தை இயற்றிய பொழுது ஸ்ரீதேசிகன், 'ஸத்யைகாலம்பி பாஷ்யம்' என்று ஸ்ரீபாஷ்யத்தின் பெருமையை மிகவும் சிறப்பாகப் பேசினார். எல்லாப் பாஷ்யங்களைக்காட்டிலும் இந்தப் பாஷ்யத்திற்கு ஏற்றத்தை 'ஸத்யைகாலம்பி' என்ற பதத்தினால் காட்டியருளினார். உண்மையான பரப்ரஹ்மம் என்ற பரம்பொருளை ஸ்தாபிப்பதற்காகவே நம் ராமாநுஜர் இந்த க்ரந்தத்தை இயற்றினார். மற்றப் பாஷ்யங்களுக்கு இந்தப் பெருமை கிடையாது. இதைச் சிறிது விளக்கிக் கூறுவோம்.

அத்வைத மதத்தில் எல்லாவற்றையும் பொய் என்று கூறுகிறபடியால், அவர்களுடைய பாஷ்யம் ஸத்யமான பொருளைக் கூறுவது என்று சொல்ல முடியாது. உண்மையில் ஜகத்தைப் பொய் என்று சொன்னாலும் பரப்ரஹ்மம் உண்மை என்று அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறபடியால் ஸத்யமான பொருளை அந்தப் பாஷ்யம் கூறுகிறதே என்று சந்தேகப்படலாம். ஆனாலும் ஓர்வகைக் குணமும் இல்லாத பரப்ரஹ்மத்தையே அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறபடியால், குணங்களோடு கூடிய விசேஷ பரப்ரஹ்மத்தை அவர்கள் இசையாத படியால், அத்தகைய உண்மைப் பொருளை அவர்களின் பாஷ்யம் கூறவில்லை. யாதவப்ரகாசருடைய பாஷ்யமும், பாஸ்கரருடைய பாஷ்யமும் உண்மையான ப்ரஹ்மத்தைக் கூறுகின்றன. ஆயினும் அவர்கள் சக்தியையும் உபாதியையும் உண்மைப் பொருள் என்று கூறினாலும், அந்தப் பொருள் பாதிதமாகிறது என்று இசைகிறபடியால், அந்தப் பாஷ்யங்களும் சரியல்ல. ஸத் என்றால் சித் என்று அர்த்தம். தி என்றால் அசித் என்று பொருள். யம் என்றால் இவற்ளை ஏவுகிறவன் என்ற அர்த்தம். இப்படிப் பட்ட சேதன அசேதனப் பொருளை நியமிக்கிற ப்ரஹ்மமே சத்தியம். இந்த அர்த்தத்தைக் கூறுகிறது ராமாநுஜ பாஷ்யம். இதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் 'ஸ்த்யைகாலம்பி பாஷ்யம்' என்று ஸ்ரீதேசிகன் அருளிச் செய்தார்.

குல்லாவிற்குத் தகுந்தாற்போல் தலையைச் சீவுவது எங்கும் கிடையாது. தலைக்குத் தகுந்தாற்போல்தான் குல்லாயை வாங்குவது. இது உலக இயற்கை. சங்கரபாஷ்யம் முதலிய ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யங்கள் இதற்கு மாறானவை. அவர்கள் முதலில் அத்யாஸ பாஷ்யம் என்ற ஒரு பூர்வ பீடிகையை ஆரம்பித்துத் தங்கள் மனத்திற்கு ஏற்றாற்போல் ஓர் அர்த்தத்தை நிஷ்கர்ஷம் செய்து கொண்டு, 'இதுதான் வேதாந்தங்களுக்கும் ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கும் ஸாரமான பொருள்' என்று தீர்மானித்தார்கள். அதைக் கொண்டு ப்ரஹ்மஸூத்திரத்திற்குத் தங்கள் அபிப்பிராயத்திற்கு இணங்கப் பொருள் கூறிவிட்டனர். இதற்கு ஏற்றாற்போல், வேதாந்தபாகம் என்ற வேதசிரஸ்ஸான பேதச்ருதியையும் ஸகுண ச்ருதியையும் ப்ரமாணம் இல்லை என்று ஸ்தாபிக்க முயன்றனர். ஆகவே சிரஸ்ஸைக் குல்லாவிற்குத் தகுந்தாற்போல் சேதித்துவிட்டனர். இது அவர்களுடையப் பெருங்குற்றம். நம் ஸ்ரீராமாநுஜர் இம்மாதிரியான குமார்க்கத்தில் இறங்காமல், உபநிஷத்துக்களிலும் அவற்றின் விவரணமான ஸூத்ரங்களிலும் சொன்ன ஸாரமான பொருள்களையே மனத்தில் கொண்டு, ஒவ்வோர் அக்ஷரத்தையும் வியர்த்தமாக்காமல் விவரணம் செய்தார். இதைக் காட்டவே, 'ஸூத்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே' என்று ஆரம்ப பாஷ்யம் ஏற்பட்டது. இதனால் ஒவ்வோர் அக்ஷரத்திலும் அர்த்தத்தைப் பர்யாலோசனை செய்து பாஷ்யம் இயற்றப் பெறுகிறது. நம் மனத்திற்குத் தோன்றின அர்த்தம் சொல்லப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. 

மந்திரத்திலேயும், அந்த மந்திரத்தில் சொல்லப்பட்ட தேவதையினிடத்திலேயும், அந்த மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனிடத்திலேயும் பக்தி அவசியம் இருக்கவேண்டும். பக்தி இருந்தால்தான் நற்கதி பெற முடியும: மந்திரத்தின் அர்த்தங்களையும் நன்கு அறிதலும் இயலும். உபநிஷத்தாகிற மந்திரம், அதில் சொல்லப் பெறும் ஸ்ரீமந்நாராயணனான தேவதை, அதை உபதேசித்த பகவான் இந்த மூன்று பேரிடத்திலும் நமக்குப் பக்தி வேண்டும். அதுபோல், வியாஸஸூத்ரத்திலும், அதனால் சொல்லப்பெறும் பரப்ரஹம்த்தினிடத்திலும், இந்த ஸூத்ரத்தை உபதேசித்த வியாஸரிடத்திலும் நமக்குப் பக்தி வேண்டும். இப்படி இருப்பவனுக்குத்தான் வேதாந்த அர்த்தமும் ஸூத்ரார்த்தமும் நன்றாய்ப் புலப்படும். அது மற்றவர்களுக்கு இல்லாத காரணத்தினால், ஸூத்ரார்த்தத்தை நன்கு அறிய அவர்களால் முடியவில்லை. இப்படியே நம் ஸ்ரீபாஷ்யத்திலும் அதில் சொல்லப் பெறும் ஸ்ரீநிவாஸனாகிற பகவானிடத்திலும், இதை உபதேசம் செய்த ஸ்ரீபாஷ்யகாரரிடத்திலும் பக்தி இருப்பவனுக்கே ஸ்ரீபாஷ்யார்த்தம் நன்கு விளங்கும். மற்றவனுக்கு அது சுலபமன்று. 'தத்பாஷ்யம், ஸ ச பாஷ்யக்ருத், ஸ ச ஹரி: ஸம்யக் ப்ரஸீதந்து ந:' என்றனர் பெரியோர்.

இந்த ஸ்ரீபாஷ்யத்தை நம் ராமாநுஜர் அநேக சாஸ்திரங்களில் பரிசயம் பெற்ற கூரத்தாழ்வார் என்ற தம் சிஷ்யரைத் தம் சகாயத்திற்கு வைத்துக் கொண்டு இயற்றினார் என்று பெரியோர் சொல்லுவர். கூரத்தில் அவதரித்த இந் ஆழ்வானுடைய மகிமை வாசாமகோசரமானது. ஸ்ரீபாஷ்யகாரரைவிட இவர் வயதில் முதிர்ந்தவர்; திறமையிலும் அறிவிலும் மிகப் பெரியவர் என்றே சொல்லலாம். இவரது ஸம்பந்தத்தினால்தான் ஸ்ரீபாஷ்யகாரருக்கே அதிகமான ஏற்றம் உண்டாயிற்று என்றும் சொல்லலாம். தரிசனத்திற்காகத் தமது தரிசனத்தை (கண்ணை)க் கொடுத்துக் காப்பாற்றியவர் இவர். இவரைப்பற்றிப் பெரியோர் பணிக்கும் ஒரு ச்லோகத்தை இங்குக் குறிக்கிறோம் -

அர்வாஞ்சோ யத்பதஸர ஸிஜத்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யான்வயமுபகதா தேசிகா முக்திமாபு :
ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத்ஸம்பந்தாத் அமநு தகதம் வர்ண்யதே கூரநாத : ||

எந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடி ஸம்பந்தத்தை அடைந்து பிற்பாடரான ஆசார்யர்கள் மோக்ஷத்தை அடைகிறார்களோ, எந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய திருமுடி ஸம்பந்தத்தை முன்னிட்டு முந்திய ஆசார்யர்கள் மோக்ஷத்தைப் பெற்றார்களோ அப்படிப்பட்ட ராமாநுஜமுனியும் இந்தக் கூரத்தாழ்வானின் ஸம்பந்தத்தினால் தான் தமக்கு ஏற்படும் முக்தி கரஸ்தம் என்று நினைத்தாராம். ஆகவே இவருடைய பெருமை வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாதது என்பதில் என்ன சந்தேகம்?

'மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்' என்று திருவரங்கத்தமுதனாரும் ஆழ்வானைப் புகழ்ந்து பேசினார். இப்படி அளவில்லாத பெருமையை இவர் பெற்றார் என்றால் ஸ்ரீபாஷ்யகாரருக்குப் பெருமை குறைந்துவிடுமோ என்று நினைக்க வேண்டாம். சிஷ்யனின் பெருமை வளர வளர ஆசார்யனுக்கன்றோ பெருமை அதிகமாகும்? மஹாலக்ஷ்மியைப் பகவானைக்காட்டிலும் உயரந்தவளாகக் கூறினால் பர்த்தாவான பகவானைப் புகழந்ததாகவன்றோ அமையும்? 'சிஷ்யாத் இச்சேத் பராஜயம்' என்றன்றோ சாஸ்திரம் சொல்லுகிறது? இது ஆசார்யனின் ஸ்துதியில் முடியும்.

ஓர் அரையர் பகவானிடத்தில் அதிக பக்தி கொண்டவர்; ஆழ்வார் பாசுரத்தின்படி அபிநயம் செய்து காட்டுபவர். இவர் செய்யும் அபிநயத்தைக் கண்டு பகவான் இவரிடத்தில் மிக்க காதல் கொண்டு இவருடன் பேசத் தொடங்கிவிட்டார். இப்படி நாளடைவில் தம்மிடத்தில் பகவான் நேராகப் பேசுவதைக் கண்டு இவர் கர்வம் கொண்டார். நம்மைவிட மேலானவர் யாருமில்லை என்று மனம் கலங்கினார். இப்படியிருக்க, இவர் பகவானிடத்தில் எல்லாப் பாகவதர்களையும் தூஷிக்க ஆரம்பித்துவிட்டார். நாட்கள் சென்றன. பகவான் இவரைத் திருத்தநினைத்தார். ஒரு சமயம் பகவான் இந்த அரையரைக் கண்டு, "இந்த பாகவததூஷணம் ஆழ்வார்களிடத்திலும் செல்லுமோ?" என்று கேட்டார். அரையர் ஆம் என்றார். "செல்லாமல் என்ன? ஆழ்வார்களும் ஆமஸ்துதியில் இறங்கினவர்களே!" என்றார். "எங்கே?" என்று பகவான் கேட்க, "திருமங்கையாழ்வார் ஒருவரே போதும்" என்றார்.

"செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் 
சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமலத் தடவயல்சூழ் ஆலி நாடன்
அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர்க குழலியர்வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்
தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே

என்ற பாசுரத்தைத் தலைசாய்த்து நீர் கேட்டதில்லையோ? இந்த பாசுரத்தில் உள்ள நான்கு அடிகளில், ஓர் அடியால் உம்முடைய குணங்களைக் கூறினார். மற்ற மூன்று அடிகளினாலும் தமது மகிமையைப் பேசிவிட்டார். தம்முடைய பிருதங்களையும் தமக்கு ஏற்படட அசாதாரணமான பெருமைகளையும் பேசித் தம்மைப் புகழ்ந்தாரே தவிர உம்மை அதிகம் புகழவில்லை. இது என்ன பகவத்குணாநுபவம்!" என்றார் அந்த அரையர்.

அப்போது பகவான் புன்சிரிப்புடன், "என் பக்தர்களின் மகிமையைப் பேசுவது என் ஸ்தோத்திரத்தில்தான் முடியும். அது அவர்களுக்குக் குற்றமாகாது. எங்கும் என்னைப் புகழ்ந்து பேசுவது, என் குணங்களைப் பேசுவது, நான் வஸிக்கும் திவ்ய தேசங்களைப் பேசுவது, அங்குள்ள பாகவதர்களைப் பேசுவது, அங்கு நடைபெறும் நானாவிதமான பூஜைகளையும் யாகயஜ்ஞங்களையும் பேசுவது, எல்லாம் என் ஸ்தோத்திரத்தில்தான் கடைசியில் முடியும். இது அவர்களுக்குக் குற்றமன்று" என்றாராம்.

இதைக் கேட்ட அரையர் தலைவணங்கி தம் குற்றத்தை அறிந்து, பாகவதர்களைத் துதிசெய்து ஆராதிக்க ஆரம்பித்தாராம். ஆகவே, பாகவதபூஜை என்பது பகவானின் பூஜையில் முடிகிறது என்பது தெளிவாகிறது. இதுபோலவே ஆழ்வானுடைய மகிமையைச் சொல்லுவது ஸ்ரீபாஷ்யகாரரின் மகிமையில் முடிகிறது என்று கொள்ளவேண்டும்.

மேலும் ஸ்ரீபாஷ்யகாரரின் மகிமையை அநுபவிப்போம். ஒருவன் தாகத்தால் நாக்கு வறண்டிருந்தான். எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தான். சிறிது தூரத்தில் ஒரு தடாகத்தைக் கண்டான். தன் வேட்கையைத் தணிக்க ஓடி வந்தான். முதலில் சேறு அதிகமாக இருந்தபடியால் அதில் சிக்கிக் கொண்டான். கஷ்டப்பட்டு அதிலிருந்து வெளிவந்தான். மீன் பிடிப்பதற்காகப் போட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டான். மேலும் கஷ்டத்துடன் செல்ல முயன்றான். அங்கு ஒரு யந்திரம் இருந்தது. அதைத் தாண்ட முடியவில்லை. பெருமுயற்சி செய்தும் முடியாமல் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து விட்டான். யாராவது நம்மை இந்தக் கொடிய சிக்கலிலிருந்து விடுவிப்பார்களோ என்று வருந்தினான். அதே சமயத்தில் இவன் செய்கையைக் கண்ட ஒருவன் ஓடோடி வந்து, தடியைக் கொடுத்துப் பள்ளத்திலிருந்து விடுவித்து, இவனை மெதுவாக கரையை அடைவித்தானாம். அதுபோலவே துர்த்தசை பகவானுக்கும் ஏற்பட்டுவிட்டது. 

இதர சமயவாதிகளிடம் அகப்பட்டுக் கொண்டான் பகவான். சைவசமயம் என்ற சேற்றில் சிக்கிக் கொண்டான். கபிலர்களின் கற்பனைவலையில் அகப்பட்டான். த்ருஹிணமதமாகிய யந்திரத்தை அடைந்து, தாண்ட முடியாமல் தவித்தான். பள்ளத்திலும் விழுந்தான். அது எந்தப் பள்ளம் என்றால், மாயா வாதிகளாகிற அத்வைதிகளின் வஞ்சனையாகிய பெரும் பள்ளம். இதிலிருந்து வெளிக்கிளம்ப முடியாமல் தவித்துக் கொண்டு, 'ஐயோ! ஸர்வ சக்தனான எனக்கும் இந்தக் கதியா! என்னை மீட்பவர் எவரும் இல்லையா?' என்று கதறினான். அப்போது நம் ராமாநுஜர் தம் கையிலுள்ள த்ரிதண்டத்தைக் கொடுத்துப் பள்ளத்திலிருந்து பகவானை வெளிக்கிளப்பினார். வலைகளையும் அறுத்தார். யந்திரத்தையும் உடைத்தார். பகவானின் கையைப்பிடித்து அவனுக்கு நற்கதிையும் கொடுத்தார். இப்படி இவர் அவதரித்திராவிட்டால் பகவானின் கதி என்னவாகியிருக்கும்? இதைத்தான் வேதாந்தாசிரியர் யதிராஜ ஸப்ததியில்,

கபர்மத கர்தமம் கபிலகல்பநாவாகுராம்
துரத்யயமதீத்ய தத் த்ருஹிணதந்த்ரயந்த்ரோதரம் |
குத்ருஷ்டிகுஹநாமுகே நிபதத: பரப்ரஹ்மண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: || (38)

என்றார்.

சைவமதச் சேற்றையும், கபிலரின் வலையையும், த்ருஹிணரின் யந்திரத்தையும், குத்ருஷ்டிகளின் வஞ்சனையையும், உபநிஷத்துக்களிலும் அதன் விவரணமான ப்ரஹ்மஸூத்ரங்களிலும் சொல்லப்பட்ட நீதிகளைக் கொண்டு விலக்கினார் யதிராஜர். இவற்றை எடுத்துக்காட்டவே ஸூத்ர வியாக்கியானமாக ஸ்ரீபாஷ்யம் அருளிச் செய்தார். இவர் இந்த ஸ்ரீபாஷ்யத்தை இயற்றாமலிருந்திருந்தால் பரப்ரஹ்மத்திள் கதி என்ன ஆகியிருக்குமோ ! அது மாத்திரமா? நாமும் அவர்களின் சேற்றிலும் வலையிலும் வஞ்சனையிலும் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாகும். பகவான் நம் எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவன்; சேஷி; நாம் அவனுக்கு சேஷபூதர்கள்; இதுதான் ப்ரணவத்திற்கு முக்கியமான பொருள்; வேதங்களிலும் சொல்லப் பெறும் விழுப்பொருள். - இந்த அர்த்தத்தைத்தான் ஸூத்ரகாரர் தெளிவாக அருளிச் செய்தார். இதையேதான் ஸ்ரீபாஷ்யகாரர் பலபடியாகப் பல அதிகரணங்களில் எடுத்துக் கூறினார். இந்த அர்த்தத்தை அறிந்தவன் சேற்றில் விழுந்து தவிக்கமாட்டான்; வலை முதலியவற்றில் சிக்கமாட்டான். இதுதான் ஸ்ரீபாஷ்யத்திற்கு ஸாரமான அர்த்தம்.

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

*****

Enter supporting content here