மௌன விரதம்
சாஸ்திரங்களில்
எத்தனையோ விரதங்கள்
இருக்கின்றன. விரதம்
என்றால் நோன்பு. ஏகாதசி
விரதம், துவாதசி விரதம்,
மௌன விரதம், உண்ணா விரதம்
என்பவை போன்ற பல நோன்புகள்
தர்ம நூல்களில் பரக்க
சொலலப்பெற்றிருக்கின்றன.
பல நோன்புகள் தர்ம நூல்களில்
கூறப்படாதவையும், தங்கள்
தங்கள் மனத்துக்குப்
பிடித்தமானவையும், அவ்வப்போது
தோன்றி அநுஷ்டிக்குமவையும்
இருக்கின்றன. இந்த நோன்புகள்
வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும்
கூறப்பெறாமலிருந்தபோதிலும்
ஆசாரத்தினால் ஏற்பட்டவையானபடியால்
இவற்றை அங்கீகரித்து
அநுஷ்டித்துப் போருகின்றனர்
பாமரர்கள். ஏகாதசி முதலிய
நோன்புகள் சாஸ்திரங்களில்
ஸித்தங்களானபடியால்
அனைவரும் ஆதரித்து வருகின்றனர்.
இந்த நோன்புகளை அநுஷ்டிப்பவர்கள்
இவற்றுக்கு உண்டான நியமங்களுடன்
செய்ய வேண்டும். அப்படிச்
செய்யாவிட்டால் இவை பயனற்றனவாக
ஆகிவிடும். உதாரணமாக,
ஏகாதசி விரதத்தை அநுஷ்டிப்பவன்
காலையில் எழுந்து, கிரமமாக
ஸ்நானம், ஸந்தியை முதலியவற்றைச்
செய்து முடித்து, பகவதாராதனம்
செய்து, ஆசார்யர்களால்
உபதேசிக்கப்பெற்ற மந்திரத்தை
பகவத்ஸந்நிதியில் விஜ்ஞாபித்து,
('ஏகாதசியில் ஆஹாரத்தை
உண்ணாமல் இருந்து துவாதசியில்
பாரணை செய்கிறேன். புண்டரிகாக்ஷனே,
இந்த நோன்பைத் தவறுதல்
இல்லாமல் நீ எனக்கு நடத்தித்
தரவேண்டும்' என்று விஜ்ஞாபித்து),
ஆசாரத்துடன் இருக்க வேண்டும்.
பகலிலும் இரவிலும் ஆஹாரம்
இல்லாமலும் பகவத் ஸ்தோத்திரங்களைச்
சொல்லியும் தூங்காமலும்
இருந்து நடத்த வேண்டும்.
ஒருவன்
ஏகாதசியன்று காலை நான்கு
மணிக்கே ரெயிலில் பயணம்
செய்து துவாதசி காலை
ஆறு மணிக்கு வெளியூர்
செல்கிறான். இவன் நியமத்துடன்
இருப்பதனால் ரெயிலிலும்
பஸ் வண்டிகளிலும் எதையும்
சாப்பிடமாட்டான். இதைக்
கொண்டே ஏகாதசியன்று
உண்ணாமலிருந்தபடியால்
ஏகாதசி விரத்தை அநுஷ்டித்தவனாக
ஆகமாட்டான். 'நான்தான்
ஏகாதசியன்று எதையும்
சாப்பிடாமல் இருந்திருக்கின்றேனே;
உபவாஸம் இருந்தது போலத்தானே
அதுவும்?' என்று சொன்னால்
அது பயன்படாது. அதற்கு
உண்டான நியமங்கள் அவனிடத்தில்
இல்லாதபடியால் உபவாஸபலன்
ஏற்படாது. இதுபோலத்தான்
எல்லா விரதங்களிலும்
நியமங்கள் இருக்கின்றன.
எனவே நியமங்களுடன் விரதங்களை
அநுஷ்டித்தால் தான் பலன்
ஏற்படும்.
ஹரிதின திலகம்
என்பது ஸ்வாமி தேசிகனின்
க்ரந்தம். அதில் ஏகாதசி
வ்ரதம் என்று என்பதையும்
நியமங்கள் என்ன என்பதையும்
யார் யார் இருக்க வேண்டும்
என்பதையும் பரக்கச் சொல்லியிருக்கிறார்.
நியமத்தோடு
கூடிய ஏகாதசி விரதத்துக்கும்
விலக்குகள் உண்டு. ஒருவன்
'ஏகாதசி நோன்பை அநுஷ்டிக்கிறேன்
என்று பகவத் ஸந்நிதியில்
ஸங்கல்பம் செய்துகொண்டிருக்கிறான்.
ஆனாலும் சில காரணங்களால்
சில வஸ்துக்களைச் சாப்பிட
நேர்ந்துவிடுகிறது. இதைக்
கொண்டு அவனுக்கு உபவாஸம்
பலிக்கவில்லை என்று சொல்ல
முடியாது.
அஷ்டைதாந்யவ்ரதக்நாநி
ஆபோ மூலம் க்ருதம் பய:
| ஹவிர் ப்ராஹ்மணகாமாயாம்
குரோர் வசநமௌஷதம் ||
"தண்ணீர்,
கிழங்கு, நெய், பால், ஹவிஸ்,
நிமந்த்ரணம் இருத்தல்,
ஆசார்யர்களுடைய நியமனம்,
மருந்து இவை இந்த ஏகாதசி
நோன்புக்குத் தடங்கலைச்
செய்யமாட்டா. 'உபவாஸம்
இருக்கிறேன்' என்று நிச்சயம்
செய்துகொண்டவன் தேக
அஸௌகரியம் ஏற்பட்டால்
நெய், பால் முதலியவற்றை
உண்டாலும் நோன்பு வீணாகாது."
ஒருவன்
தன் பித்ருக்களை உத்தேசித்து
ச்ராத்தம் செய்கிறான்.
அதற்கு இரண்டு ஸ்வாமிகளை,
'ஸ்ரீபாததீர்த்தம் ஸாதித்து
ச்ராத்தத்தைப் பூர்த்தி
செய்துவைக்க வேண்டும்'
என்று ப்ரார்த்தித்திருந்தான்.
அவர்களும் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
அன்றைத் தினம் காலை ஒன்பது
மணிக்கு அந்த ஸ்வாமிகளுக்குச்
சில அஸந்தர்ப்பங்கள்
ஏற்பட்டுவிட்டன. அதனால்
அந்த ச்ராத்தத்தை அவர்களால்
பூர்த்தி செய்து வைக்க
முடியாமற் போய்விட்டது.
அப்போது அவன் என்ன செய்வான்?
ச்ராத்தமோ நடந்தாக வேண்டும்.
ஊரிலுள்ளவர்கள் எல்லாருமே
காபி, பலகாரம் சாப்பிட்டுவிட்டார்கள்.
அதனால் அவர்களையும் வைக்க
முடியவில்லை. என்ன செய்வது?
ஏதோ தெய்வாதீனமாக அவ்வூரில்
ஆசாரசீலரான இரண்டு ஸ்வாமிகள்
சாப்பிடாமல் இருக்கிறார்கள்.
அன்று ஏகாதசி தினம். எனவே
அவர்கள் உபவாஸம் இருப்பவர்கள்.
அவர்களைக் கொண்டு இந்த
ச்ராத்தத்தை நடத்தினால்தான்
உண்டு. அவர்களோ உபவாஸம்
இருக்கிறவர்கள் ஆனபடியால்
நிமந்த்ரணத்துக்கு இருக்கமாட்டேன்
என்று சொல்கிறார்கள்.
அந்தச் சமயத்தில் ஒரு
பெரியவர் சொன்னார் -
"ஸ்மிருதிகளில், 'எட்டு
விஷயங்கள் விரதத்தைப்
பாதிக்கமாட்டா' என்று
சொல்லியிருக்கிறது.
அவற்றுள் ஒன்று - ஏகாதசியன்று
நிமந்த்ரணம் இருத்தல்'
என்றார். சாஸ்திரம் நமக்கு
எல்லா வகையிலும் நன்மையையே
கூறுகிறபடியால், இப்படிப்பட்ட
சமயத்தில் நிமந்த்ரணம்
இருந்து ச்ராத்தத்தைப்
பூர்த்தி செய்துவைப்பது,
உபவாஸத்துக்குச் சமமான
பலனைக் கொடுக்கும் என்று
தேறுகிறது. இதைக் கொண்டு,
ஒவ்வோர் ஏகாதசியிலும்
நம்மை நிமந்த்ரணத்துக்கு
யார் அழைக்கப் போகிறார்கள்
என்று எண்ணியிருப்பதோ,
அப்படி நிமந்த்ரணம் இருப்பதோ
நியாயமல்ல. இந்த நோன்பை
ருக்மாங்கதன் என்ற அரசன்
தானும் அநுஷ்டித்தான்;
ஜனங்களையும் அநுஷ்டிக்கும்படி
செய்தான் என்பது உலகப்
பிரசித்தம்.
துவாதசி
விரதத்தை அம்பரீஷர் என்ற
மகா பாகவதர் அநுஷ்டித்தார்
என்பதும் தெரிந்ததே.
உண்ணாவிரதம் என்பதை எல்லாரும்
நன்கறிவர். அவரவர் மனோரத
பூர்த்திக்காக அரசாங்கத்தை
எதிர்த்தோ, தம் மேலதிகாரியை
எதிர்த்தோ இதைச் செய்து
வருகிறார்கள். ஆனால்
எல்லா விஷயங்களைப் பற்றியும்
தம் மனம் போன வழியே உண்ணாவிரதம்
இருக்கிறேன் என்பது சரியல்ல.
சாஸ்திரங்களில் வகுத்ததாயும்,
நியாயமாயும் உள்ள விஷயங்களில்தான்
இந்த விரதத்தைச் செய்தல்
நல்லது. ராமனுக்கும்
பரதனுக்கும் முடிசூடுதல்
விஷயமாகப் பெருத்த ஸம்வாதம்
ஏற்பட்ட சமயத்தில் பரதன்
கூறுகிறான் -
அநாஹாரோ
நிராலோகோ தநஹீநோ யதா
த்விஜ:| சேஷ்யே புரஸ்தாத்
சாலாயா யாவந் ந ப்ரதியாஸ்யதி||
"தலையைத்
துணியால் மூடிக்கொண்டு,
ஏழையான பிராம்மணன் எப்படி
ஆஹாரமில்லாமல் உண்ணாவிரதம்
இருப்பானோ அதுபோல்,
நானும் இருந்து பர்ணசாலையின்
வாசலில் இராமன் திரும்பும்
வரையில் படுத்துக்கொள்வேன்"
என்றான்.
வீட்டில் சண்டை
ஏற்படும். அதன் காரணமாக
கோபமடைந்து சாப்பிடாமல்
இருப்பார்கள். சிலர்
காரணமின்றியே வியாழன்
முதலிய தினங்கள் போஜனம்
செய்யார். இவையெல்லாம்
சாஸ்திரஸித்தமாகாது.
ராமனும், பரதனிடம், இப்படி
செய்வது சாஸ்த்ர முரண்
என்று மறுத்தார்.
இனி,
மௌன விரதத்தைச் சற்று
ஆராய்வோம்.இந்த விரதம்
சாப்பிடும்போதும், பிரதோஷ
காலங்களிலும், பகவதாராதனம்
செய்யும் காலத்திலும்,
வேள்வி செய்யும்போது
சிற்சில காலங்களிலும்,
செய்ய வேண்டியது என்று
சாஸ்திரம் கூறுகிறது.
சாப்பிடும் சமயத்தில்
மெளனமாக இருக்கவேண்டும்.
நான்கு பேர் ஓர் இடத்தில்
ஒரே சமயத்தில் சாப்பிடும்போது
பேச ஆரம்பித்துவிட்டால்
வம்பளப்பு அதிகமாகவே
போய்விடும். வம்பளப்பிலுள்ள
ஸ்வாரஸ்யத்தினால் எதைப்
பேசலாம் எதைப் பேசக்கூடாது
என்பதையே மறந்துவிடுவார்கள்.
அந்த வீட்டு யஜமானனின்
பெண்ணுக்குக் கல்யாணம்
நிச்சயமாகியிருக்கலாம்.
அந்தச் சமயத்தில் பத்துநாள்
தீட்டை அவர்களுக்குச்
சொல்லிக் கல்யாணமே நிறுத்தும்படி
பேசிவிடுவார்கள். இது
பெரிய அலெளகிகம். வீட்டில்,
நாம் தனியாக உட்கார்ந்து
சாப்பிடும்போது, பேச
ஆரம்பித்துவிட்டால்,
பதார்த்தங்களில் உப்பு
இல்லை புளிப்பு இல்லை
என்று சொல்லிக் கொஞ்சம்
கொஞ்சமாக வாதத்தையே
வளர்த்துவிடுவார்கள்.
பெண்டாட்டியும் ராக்ஷசியாக
இருந்துவிட்டால் சண்டையின்
முடிவு என்ன ஆகும் என்று
சொல்லவே வேண்டாம். ஆகையால்தான்
அப்பொழுது மெளனியாக
இருந்து புசிக்க வேண்டும்
என்று சாஸ்திரம் கூறுகிறது.
இந்தச் சமயத்திலும்,
சிற்சில போது பேசினால்
தோஷம் இல்லை என்றும்
சொல்கிறது. உண்ணும்போது
தனக்கு வேண்டிய பதார்த்தங்களை
ஜாடையால் காட்ட இயலாவிட்டால்
என்ன செய்வது? எல்லாருமே
இங்கிதங்களைக் காட்டவா
முடியும். அதனால் அந்தச்
சமயத்தில் வேண்டியவற்றை
வாயால் கேட்டுப் பரிமாறும்படி
செய்து புசித்து, ஆத்மவஞ்சனை
செய்யாமல் இருக்க வேண்டும்.
ப்ரதோஷ
காலங்களில் மெளனியாக
இருத்தல் வேண்டும் என்பது
சாஸ்திரம். அந்தச் சமயங்களிலும்
ஒரு பெரிய பாகவதரோ ஆசார்யரோ
இவரிடம் வந்துவிட்டால்
அப்போது குசலப்ரச்னம்
செய்து பூஜித்துப் பிறகு
பழைய மெளனவிரதத்தைக்
கடைபிடிக்க வேண்டும்.
'நான் மெளனவிரதம் இருக்கிறேன்
என்று ஸங்கல்பம் செய்துகொண்டுவிட்டேன்.
ஆகையால் பாகவதரையோ ஆசார்யரையோ
பார்த்தாலும் பேச மாட்டேன்'
என்று முரட்டுப் பிடிவாதம்
செய்கிறவர்கள் பலர் இருக்கின்றனர்.
அவர்கள் சாஸ்திரத்தை
நன்கு ஆராய்ந்து பார்த்தவரல்லர்.
பாகவதர்களின்
பெருமையையும் பகவானின்
மகிமையையும் அறியாதவர்தாம்
அப்படி இருப்பார்கள்.
நாம் ஸந்தியா வந்தனம்
செய்கிறோம். காயத்ரி
ஜபம் செய்யும்போது ஒரு
மகான் வெளியூரிலிருந்து
நம் இல்லத்திற்கு வந்துவிட்டார்.
ஜபகாலத்தில் ஒருவரோடும்
பேச வேண்டாம் என்று சாஸ்திரம்
கூறுகிறது. இந்தச் சமயத்தில்
வந்த அந்த மகானை, 'எழுந்தருளவேண்டும்,
என்னை அநுக்ரகிக்கவேண்டும்'
என்று குசலங்களைச் செய்வது
யுக்தமா, அயுக்தமா என்று
ஆராய்வதே அனிஷ்டத்தைக்
கொடுக்கும். வந்த மகானை
நன்கு புரஸ்கரித்துப்
பிறகுதான் ஜபத்தைத் தொடர்ந்து
செய்ய வேண்டும். நூற்றெட்டுத்
தடவை காயத்ரி ஜபம் செய்கிறேன்
என்று உட்கார்ந்தவன்,
ஐம்பது தடவை ஆனதும் மகான்
வந்துவிட்டால், அவரை
நன்கு புரஸ்கரித்து மேற்கொண்டு
ஜபத்தைச் செய்ய ஆரம்பிக்கலாம்.
இதில் யாதோரு தோஷமும்
இல்லை. அப்படிச் செய்யாமல்
இருந்தால்தான் பகவானுக்கு
அப்ரீதி உண்டாகும். பகவான்
கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்
வீதியில். அந்தச் சமயத்தில்
பாதி ஜபம் செய்தகொண்டிருந்தாலும்
அதை நிறுத்திப் பகவானை
நன்கு உபசரித்துப் பிறகு
தொடர்வதுதான் நல்லது.
இதுதான் தர்மஸுக்ஷ்மம்.
நகரம்
அருள்புரிந்து நான்முகற்குப்
பூமேல் பகர மறைபயந்த
பண்பன் - பெயரினையே புந்தியால்
சிந்தியா தோதி உருவெண்ணும் அந்தியால்
ஆம்பயனங் கென்?
என்றார்
ஆழ்வார். நாம் தினந்தோறும்
சந்தியில் ஜபம் செய்யும்போது
பகவானுடையப் பெயரைத்
தியானம் செய்து கொண்டே
அநுஷ்டிக்க வேண்டும்.
அந்தச் சமயத்தில் வெறும்
வம்பளப்பு ஏற்படுகிறது.
பட்டுப் புடவையின் விலை
என்ன? எங்கு உபந்யாஸம்
செய்தால் இம்மாதிரி புடவையை
வாங்கிக் கொடுப்பார்கள்?
நேற்று வந்த இந்தச் சேலையை
மனைவியைப் பார்த்து,
'நீ உடுத்துக் கொள்கிறாயா,
நாட்டுப்பெண்ணிற்குக்
கொடுக்கலாமா? பெண்ணுக்குக்
கொடுத்துவிடலாமா? என்றெல்லாம்
வார்த்தையை அளந்துகொண்டே
ஜபம் செய்கிறோம். கடைசியில்,
'ஆயிரத்தெட்டு காயத்ரி
ஜபம் செய்துவிட்டேன்'
என்று மாரைத் தட்டிக்கொள்கிறோம்.
"இப்படிப்பட்ட சந்தியா
வந்தனத்தினால் என்ன பயன்
ஏற்படும்?" என்றார் ஆழ்வார்.
இப்படி
அநாவசியமான வார்த்தைகளை
உச்சரிக்கிற நாம் பாகவதர்கள்
வந்தால் அவருடன் குசல
வார்த்தைகளை ஏன் கேட்கக்
கூடாது.?
மேலும் பாண்டிய
தேசத்து அரசன் பாகவதன்.
ஸந்தி முதலியவைகளை சரிவரச்
செய்பவன். அவன் மலைய மலையில்
பகவதாராதனம் செய்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது அகஸ்த்யர்
வந்தார். வந்தவரை விசாரிக்காமல்
மதம் பிடித்த யானைபோல்
இருந்து விசாரிக்காமல்
இருந்துவிட்டான். இதைக்
கண்ட அந்த மஹரிஷி நான்
வந்தபோது மதம் பிடித்த
யானைபோல் நீ இருந்தபடியால்
யானையாகப் பிறப்பாய்"
என்று சபித்தார். பிறகு
அவனும் விஷயம் புரிந்து
மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
மகானுடைய கோபம் க்ஷணகாலம்
தான் இருக்குமாகையால்,
அவர் ப்ரசன்னராய "எம்பெருமான்
அநுக்ரஹம் ஏற்பட்டு நற்கதியை
அடைவாய்" என்று அநுக்ரஹம்
செய்தார். அந்த அரசன்தான்
கஜேந்திரன். முதலையால்
பிடிக்கப் பட்டு, துன்பமடைந்து,
பூர்வ ஜன்மவாஸனை இருந்த
படியால் 'நாராயணா மணிவண்ணா
வாராய் என் இடர் நீக்காய்'
என்றழைக்க பகவானே வந்து
ரக்ஷணம் செய்தான்.
இது
பாகவதக்கதை.
கோதாஸ்துதியில்
"மெளனத்ருஹோ முகரயந்தி
குணா: த்வதீயா:' என்றுள்ளது.
இங்கு ஒரு ஐதீஹம் சொல்லுவர்
- ஸ்ரீவில்லிபுத்தூரில்
ஸ்வாமிதேசிகன் இருந்த
ஸமயம். அப்பொழுது வெள்ளிக்
கிழமை த்ரயோதசிப்ரதோஷம்.
அன்று ஸ்வாமி தேசிகன்
ப்ரதோஷப்ரயுக்தமான
மெளன வ்ரதத்தில் எழுந்தருளியிருந்தார்.
அது சமயம், கோதைபிராட்டி,
ஆந்தொளிகையில் வீதியில்
வலம் வந்தாள். ஸ்வாமி
தேசிகன் கோதை எழுந்தருளியதும்
எப்படி ஸேவிக்காமல் இருப்பார்.
வெளியில் வந்து மங்களாசாஸனம்
செய்தாயிற்று. ஆனந்தம்
பொங்கிற்று. எவ்வாறு
ஆண்டாளுடைய குணங்களை
பரக்கப் பேசாமல் இருக்க
முடியும்? ஆகத் தானாகவே
குணங்களை அநுஸந்தித்து,
ஆண்டாள் விஷயமான ஸ்தோத்ரம்
வெளிக்கிளம்பிற்று. 'உன்னுடைய
திருக்கல்யாண குணங்கள்
என்னை பேசாமல் இருக்க
வைக்க முடியவில்லை' என்று
அநுஸந்தித்தார். அதுதான்
கோதாஸ்துதி' என்று ஐதீஹ்யம்
என்று சொல்வதுண்டு.
மோக்ஷத்துக்காக
ப்ரஹ்மத்யானம் விதிக்கப்
பட்டது. அங்கு "மந்தவ்ய:
என்றுள்ளது. அதுபோல்
'அதமுனி: என்றும் சொல்லியுள்ளது.
அங்கு மெளனம் மனனம். அது
தவிர மெளனம் சொல்லப்படவில்லை.
"விசேஷதோ மெளனம் அபண்டிதானாம்"
என்று வித்வத் கோஷ்டியில்
படிக்காதவன் எதையும்
பேசாமல் இருக்க வேண்டும்.
இவனோ மூடன். இவன் பேசினால்
இவனது மூடத்தன்மை வெளியாகிவிடும்'
என்றது நீதி.
விமானத்தில்
ஏறி ஸ்வர்க்கம் செல்லுகிறார்
மூவர். அப்பொழுது கீழே
ஒரு பாம்பு தவளையைப்
பிடித்து சாப்பிட்டுக்
கொண்டிருந்தது. அதை
பார்த்தனர். ஒருவர் "ஐயோ,
தவளை என்ன செய்தது. இதை
அக்ரமமாக பாம்பு தின்கிறதே
என்றான். அது சொன்னதும்,
விமானம் இவனை கீழே தள்ளிவிட்டது.
மற்றொருவன் 'அதன் ஆஹாரத்தை
அது புசிக்கிறது. இதில்
என்ன தவறு' என்றான். இப்படிச்
சொன்னதும் இவனையும்
கீழே தள்ளிவிட்டது விமானம்.
இதைப் பார்த்தான் மற்றொருவன்.
இருவர் விழுந்ததையும்
நோக்கி நாம் ஒன்றும்
பேச வேண்டாம் என்று இருந்தான்.
அவன் ஸ்வர்க்கம் சென்றான்.
ஆக எதையும் பேசாமல் இருப்பதுதான்
ஸர்வார்த்த ஸாதகம்.
*****
|