ராமாநுஜர் காட்டிய
விசிஷ்டாத்வைதம்
நம்
பூர்வர்களான நாதமுனிகள்
ஆளவந்தார் முதலிய ஆசார்யர்கள்
விசிஷ்டாத்வைதம் என்ற
நம் சித்தாந்தத்தை பரக்கப்
பேசியிருக்கிறார்கள்.
அதையொட்டி நம் ராமாநுஜரும்
ஸ்ரீபாஷ்யம் முதலிய தமது
நூல்களில் நன்றாக ஸ்தாபித்திருக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவர்களான நாம்
இந்த சித்தாந்தத்தை இசைந்திருக்கிறோம்.
ஆக விசிஷ்டாத்வைதம் என்ற
சித்தாந்தம் நமக்கே உரியதாக
தேறியிருக்கிறது. இப்படியிருக்க,
'ராமாநுஜர் காட்டிய விசிஷ்டாத்வைதம்'
என்று எழுதினால் இதர
மதத்தில் உள்ளவர்களும்
விசிஷ்டாத்வைதத்தை இசைந்திருக்கிறார்கள்
போல தோன்றுகிறதே, அது
அநுபபன்னமாயிற்றே என்று
ஐயம் கொள்ளலாம்.
ஆம்,
விசிஷ்டாத்வைதம் என்ற
விஷயத்தை எல்லா மதத்தினரும்
இசைந்திருக்கிறார்கள்
என்றே கொள்ளவேண்டும்.
அனைவரும் ஒப்புக் கொண்ட
விஷயம் இது. இதில் சந்தேகமே
இல்லை. விசிஷ்டாத்வைதம்
என்ற சொல்லில் ஒருவருக்கும்
வேறுபாடு கிடையாது. பொருளில்
மாத்திரம் வேறுபாடு உண்டு.
ஆகவே, ராமாநுஜர் காட்டிய
விசிஷ்டாத்வைதம், இதர
மதத்தில் கூறப்பட்ட விசிஷ்டாத்வைதத்தை
காட்டிலும் வேறுபாடு
உடையது என்பதை தெரிவிக்கவே
இப்படி தலையங்கத்தை அமைத்தோம்.
இதை அனைவரும் அறியும்படி
ஒவ்வொரு மதத்திலும்
உள்ள விசிஷ்டாத்வைத ப்ரகாரத்தை
எடுத்து விவரிக்கிறோம்,
உலகிலுள்ள
மக்கள் உய்ய வேண்டும்
என்று எண்ணி எம்பெருமான்
ராமாநுஜரை இந்தப் பூஉலகில்
அவதரிக்கும்படி செய்தான்.
அருளால் பெரும்பூதூர்
வந்த வள்ளளான எம்பெருமானார்
வேதாந்தத்தின் விழுப்பொருளான
நம் விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தை
நன்கு வளர்த்து நமக்கு
உபதேசித்தார். நாதமுனி
ஆளவந்தார் முதலிய பெரியோர்கள்
ஏற்கனவே இந்த நம் ஸம்பிரதாயத்தைப்
பல கிரந்தங்கள் வாயிலாக
உபதேசித்திருக்கிறார்கள்
என்பதில் சந்தேகமில்லை.
ஆனபோதிலும் இதரமத நிரஸனபூர்வகம்
பல வகைகளிலும் நம் ராமாநுஜர்
ஒருவரே இதை ரக்ஷித்தார்.
'நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம்
பஹுபிருபசிதம் யாமுநேயப்ரபந்தை:.
த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை:'
என்று ஸ்ரீ வேதாந்த தேசிகர்
அருளிச்செய்தார்.
தார்க்கிக
மதம், ஸாங்க்ய மதம், பாசுபத
மதம், பெளத்த மதம், அத்வைத
மதம் முதலிய எல்லா மதங்களையும்
நிராகரித்து இந்த நம்
மதத்தை ராமானுஜர் ஸ்தாபித்தபடியால்
நம் விசிஷ்டாத்வைத மதத்திற்கு
ரக்ஷணம் ஏற்பட்டது. ஆகையால்தான்
ராமாநுஜ மதம் என்றே இதற்கு
உலகத்தில் பெயர் விளங்கியது.
இதைக் கணிசித்தே, 'ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா
வர்ததாம் அபிவர்ததாம்
| திகந்தவ்யாபிநீ பூயாத்
ஸா ஹி லோகஹிதைஷிணீ ||' என்று
பெரியோர், 'ராமாநுஜருடைய
உயர்ந்த ஆஜ்ஞையாகிற விசிஷ்டாத்வைத
மதம் உலகமெல்லாம் பரவ
வேண்டும்' என்றும், 'ஜனங்கள்
உய்ய இது ஹிதமானது' என்றும்
கூறினார்கள்.
'காணாதசாக்யபாஷண்டைஸ்த்ரயீதர்மோ
விலோபித: | த்ரிதண்டதாரிணா
பூர்வம் விஷ்ணுநா ரக்ஷிதா
த்ரயீ ||' என்று, எம்பெருமானான
மகாவிஷ்ணுவே த்ரிதண்டதாரி
ராமாநுஜராகப் பூமியில்
அவதரித்து, மூன்று வேதங்களையும்
காத்து அருளினான் என்று
பெரியோர் கூறுவர்.
தற்கச்
சமணரும் சாக்கியப் பேய்களும்,
தாழ்சடையோன் சொற்கற்ற
சோம்பரும் சூனிய வாதரும்,
நான் மறையும் நிற்கக்
குறும்புசெய் நீசரும்
மாண்டனர் நீணிலத்தே பொற்கற்பகம்,
எம் ராமாநுஜமுனி போந்தபின்னே.
என்ற
திருவரங்கத்தமுமதனாரின்
நூற்றந்தாதிப் பாசுரமும்
(99) இங்கு நோக்கத்தக்கது.
'தர்க்கவாதங்களைச்
செய்யும் ஜைன மதம், பெளத்த
மதம், பாசுபத மதம், அத்வைத
மதம் முதலிய எல்லா மதங்களுமே
ராமாநுஜர் பூமியில் அவதரித்த
பிறகு சும்மெனாதே கைவிட்டோடி
இருப்பிடம் தெரியாமல்
எங்கோ பதுங்கிவிட்டன'
என்கிறார். இதில் இங்கு
'நான்மறையும் நிற்கக்
குறும்புசெய் நீசரும்'
என்பதை ஆழ்ந்து கவனிக்க
வேண்டும். இதனால் அத்வைத
மதம் சொல்லப் பெறுகிறது.
மற்ற மதங்கள் வேதங்களையே
அங்கீகரிக்காமல் தான்தோன்றியாகத்
தோன்றின. அவைப்பற்றி
அதிகம் சொல்ல வேண்டியது
ஒன்றுமில்லை. "மூலப்ரமாணமான
வேதங்களை இசைந்தும்,
அவற்றுள் சிலவற்றை ஒப்புப்கொண்டு,
சிலவற்றை விட்டு, ஒரு
மதத்தைக் கிளப்பி, 'இது
தான் வேதாந்தங்களில்
ஸாரமாகச் சொல்லப்பெறும்
மதம்' என்று சில நீசர்கள்
வாதம் புரிகிறார்களே!
அந்தோ!" என்று அவர்களை
இழிவாகக் கூறுகிறார்.
இப்படிச் சொல்பவர்கள்
வேதங்களில் குறும்பு
செய்கிறவர்கள், நீசர்கள்.
வேதங்களில்
பல இடங்களில் குறும்பு
செய்து அபார்த்தங்களைக்
கூறுகின்றனர் பிற மதத்தினர்.
அவற்றுள் ஒரு விஷயத்தைப்
பற்றி எடுத்துக் காட்டுவோம்.
அவ்விடத்தில் ராமாநுஜர்
எவ்வாறு வேதார்த்தத்தைக்
கூறி நல்வழியே செல்கிறார்
என்பதை இங்கே கவனிப்போம்.
சித்,
அசித், ஈச்வரன் என்று
மூன்று தத்துவங்கள் உள்ளன.
போக்தா, போக்யம், ப்ரேரிதா
என்று இந்த மூன்றையும்
விவரித்துக் காட்டியது
வேதம். சித் என்றால் ஜீவாத்மாக்கள்.
அசித் என்றால் அசேதனப்
பொருள். ஈச்வரன் பகவான்.
நான், நான் என்று இந்த
ஆத்மா தனக்குத் தானாகவே
தோற்றமளிக்கிறபடியால்
இவன் சித் எனப்பெறுகிறான்.
ஆத்மா ஞானரூபன், ஸ்வயம்ப்ரகாசன்.
அறிவு இல்லாமையினாலும்,
தனக்குத் தானாகவே தோற்றமளிக்க
வல்லமை அல்லாமையினாலும்,
ப்ரக்ருதி முதல் ப்ருதிவி
பர்யந்தமான பொருள்களும்
அதன் பரிணாமங்களும் அசித்
என்று சொல்லப் பெறுகின்றன.
நான் என்று ஆத்மா தனக்கு
மற்றொரு பொருளின் உதவியின்றித்
தோன்றுவது போல, கலசம்
முதலிய அறிவில்லாத பொருள்கள்
தமக்குத் தாமே தோற்றமளிப்பதில்லை
என்பது எல்லோருக்கும்
ஸ்பஷ்டம். இந்தச் சேதன
அசேதனப் பொருளுக்கும்
ஈச்வரனுக்கும் ஒருவகையான
ஸம்பந்தம் உண்டு. அந்த
ஸம்பந்தத்தை சரீராத்மபாவ
ஸம்பந்தம் என்பர். அதாவது
ஈச்வரன் ஆத்மா; சேதன அசேதனப்
பொருள் சரீரம். யஜ்ஞதத்தன்,
கோபாலன், மாதவன் என்று
சிலரை அழைக்கிறோமே,
இவர்கள் ஏதோ ஒரு வகையான
உடலைப் பெற்றவர்கள்.
அந்த உடலும் அதை ஏவுகிற
ஆத்மாவும் ஒன்றன்று.
இந்த உடல் அழியும் பொருள்;
அதனுள் இருக்கும் ஆத்மா
அழியாதவன். இவ்விருவருக்கும்
ஒரு ஸம்பந்தம் உண்டு.
அதைத்தான் சரீராத்மபாவ
ஸம்பந்தம் என்கிறோம்.
அது போலவே, சேதன் அசேதனப்
பொருளுக்கும் ஈச்வரனுக்கும்
சரீராத்மபாவ ஸம்பந்தம்.
இதை வைத்துக் கொண்டுதான்
'சேதநாசேதநவிசிஷ்டம்
ப்ரஹ்ம' என்று சாஸ்திரங்களில்
கூறுவது இயல்பு. வைசிஷ்ட்யம்
என்றால் ஸம்பந்தம் எனப்
பொருள். தண்டவிசிஷ்ட:
புருஷ:; ரூபவிசிஷ்ட: கட:'
என்று சொல்லும் இடத்தில்
'தடியோடு கூடியவன் புருஷன்;
ரூபத்தோடு கூடியது கலசம்'
என்று சொல்லுமாப் போலே
தடிக்கும் புருஷனுக்கும்
உள்ள ஸம்பந்தம் சில சமயம்
இருக்கும்; மற்றொரு
சமயம் போய்விடும். உடலுக்கும்
நமக்கும் உள்ள ஸம்பந்தமும்
சரீரம் உள்ளவரைதான் இருக்கும்.
பிறகு அழிந்துவிடும்.
ஆனால் பகவானுக்கும் சேதன்-அசேதனப்
பொருளுக்கும் உள்ள சரீராத்மபாவ
ஸம்பந்தம் என்றைக்கும்
ஒழிக்க ஒழியாதது. ஆகவே,
'சேதநாசேதந விசிஷ்டம்
ப்ரஹ்ம. சேதன-அசேதனங்களைச்
சரீரமாக உடையது, சேதன
அசேதனங்களுக்கு ஆத்மாவானது
ப்ரஹ்மம்' என்று ஏற்பட்டது.
இதைத்தான் நூல்களில்,
'விசிஷ்டம் ப்ரஹ்ம' என்று
சொல்லியிருக்கிறது.
இப்படிப் பகவான்
எல்லாப் பொருள்களையும்
உடலாகக் கொண்டவன் என்பதை
விவரிப்பதற்காகவே அந்தர்யாமி
ப்ராஹ்மணம் என்ற உபநிஷத்பாகம்
வெளிவந்தது; 'யஸ்ய ப்ருதிவீ
சரீரம், யஸ்யாப: சரீரம்,
யஸ்ய தேஜஸ் ஸரீரம்' இத்யாதியாக
இப்படி ஸமஸ்தப் பொருள்களையும்
பகவான் உடலாகப் பெற்றவன்.
இவனைத் தவிர மற்றொருவன்
இல்லாமையினாலும், 'விசிஷ்டம்
ப்ரஹ்ம. ஏகமேவ தத்வம்.
இப்படிப் பட்ட இவன் ஒருவனே
பொருள்' என்று தீர்ந்தது.
இதை மனத்தில் கொண்டு
நம் வேதாந்த தேசிகன்
'ந்யாயஸித்தாஞ்ஜனம்'
என்ற தமது கிரந்தத்தில்
முதலில், 'ஸமஸ்தசிதசித்-ப்ரகாரகம்
ப்ரஹ்ம ஏகமேவ தத்வம்'
என்றார். இதுதான் விசிஷ்டாத்வைத
ஸித்தாந்தம். 'விசிஷ்டஸ்ய
அத்வைதம் - ஏகத்வம்' கீழ்க்
கூறியபடி விசிஷ்டம் ஒரே
பொருள் என்பது நம் ராமாநுஜ
ஸித்தாந்தம். 'விசிஷ்டயோ:
அத்வைதம்' என்று ஸமாஸம்
கூறி, மற்றொரு வகையிலும்
பொருள் கூறலாம்.
அநாதியான
இந்த ஸம்ஸாரத்தில் ஸ்ருஷ்டி
என்றும், பிரளயம் என்றும்
இரண்டு தசைகள் உண்டு.
பிரளயதசையில் தேவன்,
மனிதன், மரம், செடி, கொடி,
கலசம் வீடு முதலிய பெயர்களும்
இல்லை; அப்படிப்பட்ட
உருவமும் இல்லை. அதனால்
அந்தச் சமயத்தில் சித்,
அசித் என்ற இரண்டும்
ஸூக்ஷ்மமாக இருக்கும்.
ஸ்ருஷ்டி தசையில் இந்தப்
பெயரும் உருவமும் இருக்கிறபடியால்.
அப்பொழுது ஸ்தூலமாக
இருக்கும். இரண்டு தசைகளிலும்
ப்ரஹ்மம் என்பது இவற்றை
உடலாகவே வைத்துக் கொண்டுள்ளபடியால்,
ஸூக்ஷ்ம சேதந அசேதந விசிஷ்டமாகவும்,
ஸ்தூல சேதந அசேதந விசிஷ்டமாகவும்
ப்ரஹ்மம் உள்ளது என்பது
தேறுகிறது. ஆகவே, ஒரே ப்ரஹ்மத்துக்கு
இந்த இரண்டு நிலைகளும்
வருகிறபடியால், 'ஸூக்ஷ்ம
சேதந அசேதந விசிஷ்டமும்,
ஸ்தூல சேதந அசேதந விசிஷ்டமும்
ஒன்று' என்று பொருள்
இசைந்துள்ளார்கள் நம்
முன்னோர்கள்.
இப்படி
மறைகளில் கூறியிருந்த
போதிலும் இதை உணராமல்
இருந்துவிட்டனர் அத்வைதிகளும்
த்வைதிகளும். அந்தோ!
உணரவில்லை என்பது மாத்திரம்
அல்ல; தங்களுக்குப் பிரதிகூலமான
வேதபாகங்களை அப்ரமாணம்
என்றும் சொல்லி விட்டனர்.
ஆபாஸமான அர்த்தங்களைக்
கூறுவதற்கும் இசைந்தனர்.
இதைத் திருவுள்ளம் கொண்டுதான்,
'நான் மறையும் நிற்கக்
குறும்புசெய் நீசர்.'
என்று அருளினார் அமுதனார்.
"இப்படிச்
சேதன அசேதனங்கள் உடல்
என்றும், ஈச்வரன் ஆத்மா
என்றும், இந்த சரீராத்மபாவம்
எப்பொழுதும் அழியாதது
என்றும் ஒப்புக் கொண்டால்,
பிரளயகாலத்திலும் இந்தப்
பொருள்கள் இருக்க வேண்டுமாகையால்
அப்போது, 'ப்ரஹ்ம ஒன்றுதான்;
அது அத்விதீயம்' என்று
சொல்லும் ச்ருதிகளுக்குக்
கதி என்ன?" என்று அத்வைதிகள்
கேட்கின்றனர். அவர்களை
விலக்குமாறு - ராமாநுஜ
மதத்தைச் சேர்ந்தவர்கள்தாம்
விசிஷ்டாத்வைத மதத்தினர்
என்று நினைக்க வேண்டாம்.
அத்வைதிகளும் விசிஷ்டாத்வைத
மதத்தினரே. எல்லா ஸித்தாந்திகளும்
விசிஷ்டாத்வைதத்தை ஒப்புக்
கொள்ள வேண்டும். இதில்
சந்தேமே இல்லை.
அத்வைதிகளை
முன்பு கவனிப்போம்.
அவர்கள் மூன்று பேர்
- மாயாவாதிகள், உபாதிவாதிகள்,
சக்திவாதிகள் என்று.
'மாயா விசிஷ்டம் ப்ரஹ்ம
காரணம்' என்று சங்கர மதாநுயாயிகள்
கூறுகின்றனர். 'உபாதிவிசிஷ்டம்
ப்ரஹ்ம காரணம்' என்பது
பாஸ்கருடைய மதம். 'சக்திவிசிஷ்டம்
காரணம்' என்பது யாதவ மதம்.
இவர்களும் பிரளய காலத்திலும்
மாயை, உபாதி, சக்தி என்ற
பொருள்களையும் ப்ரஹ்மத்தையும்
ஒப்புக் கொள்ளவேண்டியது
அவசியமானபடியால், 'ஏகம்,
அத்விதீயம்' என்ற ச்ருதிக்குப்
பொருள் கூறுவது எப்படி
என்ற கேள்வி எழும். மாயை,
உபாதி, சக்தி ஆகியவை ப்ரஹ்மத்துக்கு
விசேஷணமாகையாலும், ப்ரஹ்மத்தினிடத்தில்
பொருந்தியிருக்கிறபடியாலும்,
அவை தனியாக இல்லாமையினாலும்
'ஏகம்' என்ற ச்ருதிக்கு
விரோதமில்லை. 'தடியுடன்
கூடிய புருஷன் ஒருவன்
வீட்டில் இருக்கிறான்;
குண்டலதாரி புருஷன் வந்தான்'
என்றால், 'தடி புருஷன்,
குண்டலம் புருஷன் என்று
இரண்டு பொருளாயிற்றே
!' என்று கேட்பவர் உண்டோ?
என்று பரிஹரிப்பார்கள்.
இந்தப் பரிஹாரம், 'சேதநா
சேதந விசிஷ்டப்ரஹ்மம்
ஒன்று' என்று சொல்கிற
ராமாநுஜ மதத்திலும் ஒக்கும்.
சுத்தப்ரஹ்மமே
உலகத்தை உண்டுபண்ணுகிறது
என்று எந்த மதத்திலும்
சொல்ல முடியாது. ஸ்வயம்ப்ரகாசமான
ப்ரஹ்மம் தன்னை எப்போதும்
உள்ளபடி அறிந்து கொண்டிருக்கிறபடியால்,
தன்னிடத்தில் எப்படிப்
பல பேத வஸ்துக்களை உண்டுபண்ண
இயலும்? ஆகவே மாயை என்ற
ஒரு வஸ்து ப்ரஹ்மத்தை
மறைக்கிறது என்று கொள்ளுகை
அவர்களுக்கு வேண்டியது.
'உபாதி இல்லாமல் ப்ரஹ்மமே
ஜீவனாக மாறுதலை அடைகிறது'
என்றால், ஜீவனுக்கு ஏற்படக்கூடிய
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கே
ஏற்பட்டுவிடும். ஆகவே
உபாதி, சக்தி என்ற பொருள்களை
அவர்கள் இசைந்தனர். எல்லா
இடத்திலும் வியாபித்துள்ள
ப்ரஹ்மத்தில் எந்தப்
பிரதேசத்தில் உபாதிஸம்பந்தம்
ஏற்படுகிறதோ அந்தப்
பிரதேசம் ஜீவன் என்பது
பாஸ்கர மதத்தின் கொள்கை.
போக்த்ரு சக்தி, போக்ய
சக்தி, நியந்த்ரு சக்தி
என்று மூன்று வகைப்பட்ட
சக்தியுடன் கூடியது ப்ரஹ்மம்.
அந்த அந்த அம்சங்களில்
போக்த்ரு-போக்ய-நியந்த்ரு
ரூபமாக ப்ரஹ்மமே மாறுதல்
அடைகிறது என்பது யாதவப்ரகாச
மதம். இப்படியே ஜீவனையும்,
அவனது புண்ய பாபங்களாகிற
கர்மங்களையும் பிரளய
காலத்திலும் எல்லோரும்
இசைய வேண்டும்.
இப்படி
இசையாமல் ஜகத்ஸ்ருஷ்டியை
ஒப்புக் கொண்டால், புதியதாக
ஜீவனையே படைக்க வேண்டி
வரும். அப்போது, 'ஒரு புறம்
மனுஷ்யனாகவும், மிருகமாகவும்,
மற்றொரு புறம் மரமாகவும்
ஊமையாகவும் குருடனாகவும்
ஜீவர்களைப் படைப்பதற்கு
வழி என்ன?' என்ற கேள்வி
எழும். 'இதற்கு அவனவன்
வினை தான் காரணம்' என்று
உத்தரம் சொல்வதொழிய
வேறு ஸமாதானம் இல்லை.
ஆகவே கர்மத்தையும் அதைக்
கொண்ட ஜீவனையும் இசைந்தே
தீரவேண்டுமாகையால், பல
பொருள்களைப் பிரளயகாலத்தில்
அங்கீகரிக்கவேண்டியதாயிற்று.
இவர்கள் அனைவரும் அத்விதீயச்ருதியை,
'விசிஷ்டம் ப்ரஹ்ம ஒன்று'
என்று சொல்லித்தான்
நிர்வகிக்க வேண்டும்.
இப்படி எல்லா மதத்திலும்
'விசிஷ்ட ப்ரஹ்மமே காரணம்'
என்று சொல்ல வேண்டி
வருவதனால், அனைவருமே
விசிஷ்டாத்வைத மதத்தைச்
சேர்ந்தவர்களே. இங்கு,
'சேதன அசேதனங்கள் உண்டு'
என்றும், 'ஈச்வரனுக்கு
அவை உடல்' என்றும், 'ஈச்வரனே
ப்ரதானம், இவை அவனுள்
அடங்கியவை' என்றும் மறைகளில்
ஸ்பஷ்டமாக கூறியிருக்க,
இந்த அர்த்தத்தை விடுத்து,
மாயை, உபாதி, சக்தி ஆகியவற்றைக்
கல்பித்து அபார்த்தம்
கூறுவது எவ்வகையிலுமே
பொருத்தமன்று. ச்ருத்யர்த்தத்தை
விடுவதும், புதிய அர்த்தத்தைக்
கல்பிப்பதும் ஆகிய யாவும்
இதர மதத்தினருக்குக்
குற்றங்களாக ஆகின்றன.
ஆகையால், எல்லா மதத்தினருமே
ராமாநுஜர் காட்டிய விசிஷ்டாத்வைத
மதத்தில் ஒருவிதத் தோஷமும்
கூற முடியாதாகையால்,
நாம் இதைக் கடைப் பிடிக்கிறோம்.
இந்த
அர்த்தத்தை அதிகரணஸாராவளியிலும்
தத்வ முக்தாகலாபத்திலும்
நம் ஸ்வாமி வேதாந்ததேசிகன்
அழகாக அருளிச்செய்திருக்கிறார்.
அந்த ச்லோகங்களாவன:-
மாயோபாதிஸ்வசக்திவ்யதிகரிதபரப்ரஹ்மமூல:
ப்ரபஞ்சோ யேஷாம் தேப்யத்விதீயச்ருதிமபிததயந்த்யத்ர
தத்தத்விசிஷ்டே | அப்ராதாந்யாத்
ததா ந: ப்ரக்ருதிபுருஷயோரந்தராத்ம-ப்ரதாநே வாக்யேஸ்மிந்
ஸ்தூலஸூக்ஷ்மாந்வய இதி
ஜகதோநந்யபாவோபபத்தி: -
அதிகரணஸாராவலீ, அத் 2, பாதம்
1, 13, (166)
ஸாவித்யம் கேபி ஸோபாதிகமத
கதிசித் சக்திபிர் ஜுஷ்டமந்யே, ஸ்வீக்ருத்யைகாத்வீதீயச்ருதிமபி
ஜகதுஸ் தத்விசிஷ்டைக்ய-நிஷ்டாம்
| நித்யத்வம் விக்ரஹத்வம்
ப்ரக்ருதிபுருஷயோர்
ஹேதுதாம் விஸ்வகர்த்து:, தத்வைசிஷ்ட்யம்
ச சாஸ்த்ரப்ரமிதமஜஹதாம்
கோபராதோதிரிக்த: || - தத்வமுக்தாகலாபம்.(172)
*****
|